30 Apr 2013

1st May 2013<<< என்ன செய்வது? >>>


JESUS CHRIST  THE  WORD for LIFE*
இயேசு கிறிஸ்து – நித்திய வாழ்வுக்கான வார்த்தை!
<<<  A Daily Bible Devotion in Tamil by GRACE ministries  >>>
01.05.2013 (புதன்)                                                   
<<< என்ன செய்வது? >>>
நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார் (சங்கீதம் 34:19)
விடுவிக்கிற ஆண்டவருக்கே மகிமை!
துன்மார்க்கருக்கு அல்ல, நீதிமான்களுக்குத்தான் அனேக துன்பங்கள் வரும். அனேகம் என்னும்போது, சில சமயங்களில் அவை எண்ணக்கூடாதவகளாகும். ஆம் ஒன்று முடிந்தால் இன்னொன்று என துன்பங்கள் நம்மைத் தொடர்கின்றன. ஆனால் பாருங்கள், எந்த வகையான; எப்பேர்ப்பட்ட துன்பங்களானாலும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை (நம்மை) விடுவிப்பார்! அல்லேலூயா!
கர்த்தர் நம்மை துன்பங்களிலிருந்து விடுவிக்க வேண்டுமெனில் நீதிமான்களாயிருப்பது மாத்திரமல்ல, துன்பங்களின் நடுவில் நாம் செய்யவேண்டியவைகளும் உண்டு. இதுவரை நாம் அவைகளை முயற்சித்து இருக்க மாட்டோம். வேதத்திலிருந்து ஒரு சம்பவத்தை தியானித்து நாம் என்ன செய்ய வேண்டும் என அறிவோம்.
அப்போஸ்தலர் 16:16-34 வசனங்களில் பவுல், சீலா ஆகியோர் சிறைச்சாலையில் இருந்ததையும், பிறகு அவர்கள் விடுதலைபெற்றதையும் வாசிக்கிறோம்.(வாசித்துப் பார்த்து பயன்பெறுங்கள்). நம்மையும் இன்று அனேக சிறைகள் சூழ்ந்து இருக்கலாம். கடன்கள், வியாதிகள், பாரங்கள், தற்கொலை எண்ணங்கள், குடும்ப போராட்டங்கள், எதிர்கால பயங்கள் போன்ற சிறைகள். அனைத்திலிருந்தும் நமக்கு விடுதலை கொடுக்கவே, விடுதலை நாயகன் இயேசு கிறிஸ்து நம்மோடு இடைப்படுகிறார்.
சிறையிலிருந்து விடுதலை பெற அவர்கள் செய்தது என்ன?
நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். (25)
கால்கள் தொழுமரத்தில் மாட்டப்பட்டிருந்தன. கைகள் கட்டப்பட்டு இருந்தன. அவர்களால் அந்த சூழ் நிலையில் குனியக்கூட முடியாது. ஆனாலும் ஜெபித்தார்கள், தேவனைத் துதித்தார்கள், பாடினார்கள். நடந்தது என்ன தெரியுமா?
பூமி அதிர்ந்தது! பொதுவாக பூமி அதிர்ந்தால் சேதம்தான் உண்டாகும். ஆனால், அதையும் கர்த்தர், தம் பக்தர்களைக் காப்பாற்ற பயன்படுத்தினார் பாருங்கள். அவர் நம்மையும் விடுவிப்பது நிச்சயம்!
கதவுகள் திறவுண்டது! யாரும் திறக்கவில்லை. அவைகளாகவே திறவுண்டது. ஆம் நம்மைச் சுற்றியுள்ள சிறைகள், அவைகளாகவே காணாமல் போகப்போகின்றன.
எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று! பவுல், சீலா ஆகியோரின் செயல்கள், அங்கே கட்டப்பட்டிருந்தோர் அனைவருக்கும் விடுதலை கொடுத்தது. நமது ஜெபமும் துதியும் நமக்குமட்டுமல்ல, நம்மைச் சார்ந்த அனைவருக்கும் விடுதலை கொடுக்கப் போகிறது. அல்லேலூயா!
அவர்கள் விடுதலை பெற்றபிறகு, அப்பாடா விடுதலை கிடைத்துவிட்டது என்று ஓட்டமாய் ஓடவில்லை. தற்கொலை செய்துகொள்ளப்போன சிறைச்சாலைக்காரனுக்கு சுவிசேஷம் சொன்னார்கள். சிறைப்படுவதற்கு முன்னும் சுவிசேஷம், பின்னும் சுவிசேஷம், சிறையிலோ ஜெபமும், துதியும்! இவைகள்தான் நமக்கு இன்று தேவை! இவர்களது சுவிசேஷ அறிவிப்பால், சிறைச்சாலைக்காரன் குடும்பத்தோடு பாவம் என்கிற சிறையிலிருந்து விடுதலை பெற்றதோடு, மனமகிழ்ச்சியும் பெற்றார்! கர்த்தருக்கே மகிமை! நம்மால் பலரது சிறை முறிபடுவது தேவனுடைய சித்தம் என அறிவோம். நாம் நம்மையே நொந்துகொள்ளாமல், இப்போதே முழங்கால் படியிட்டு ஜெபித்து, துதித்து பாடி முயற்சித்துப் பாருங்கள். பிறருக்கு சுவிசேஷம் அறிவிக்கும்படி, கர்த்தர் நம் சிறையை மாற்றுவார். இயேசு கிறிஸ்துவின் பெயரால் நமக்கு இன்றே விடுதலை! Praise the LORD!
‘’ஆகையால், குமாரன் (இயேசு கிறிஸ்து) உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்’’ (யோவான் 8:36)
 ஆமென்!
ஜெபம் செய்வோமா?
எங்கள் அன்பு பிதாவே, நீர் கொடுத்த நல்ல வார்த்தைகளுக்காக உமக்கு ஸ்தோத்திரம். நாங்கள் துன்பத்தின் நடுவில் இருந்தாலும் ஜெபிக்கவும், உம்மைத் துதிக்கவும், சுவிசேஷம் அறிவிக்கவும் எங்களை ஒப்புக்கொடுக்கிறோம். நீர் தந்துவிட்ட விடுதலைக்காக உமக்கு நன்றி! இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
உங்கள் கவனத்திற்கு!
நித்திய வாழ்வுக்கான வார்த்தைகளைத் தியானிப்பதோடு,
உங்கள்  நண்பர்களுக்கும் பகிர்ந்து, கர்த்தரின்
ஊழியத்தில் எங்களோடு இணையுங்கள்! ஜெப உதவிகளுக்குக்
கீழே உள்ள எண்களில் தொடர்புகொள்ளுங்கள்!
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதித்துக் காப்பாராக! ஆமென்! 

To Read old Articles, please visit:  wordforlifetamil.blogspot.com
bY GRACE ministries
(+91 99524 27477, +91 99945 99677, +91 99940 16570)


29 Apr 2013

30th April 2013 <<< நிலை நிறுத்தும் கர்த்தர்! >>>


JESUS CHRIST  THE  WORD for LIFE*
இயேசு கிறிஸ்து – நித்திய வாழ்வுக்கான வார்த்தை!
<<< A Daily Bible Devotion in Tamil by GRACE ministries >>>
30.04.2013 (செவ்வாய்)
<<< நிலை நிறுத்தும் கர்த்தர்! >>>
கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக; (1பேதுரு 5:10)
தேவனாகிய கர்த்தர் நம்மை நிலை நிறுத்துகிறவர். அல்லேலூயா! நம்முடைய படிப்பில்; தொழிலில்; ஊழியத்தில்; அவருக்கேற்ற வாழ்க்கையில், ஆசீர்வாதமாய் உயர்த்தி நிலை நிறுத்துகிறவர். நித்திய மகிமையாகிய, மகிழ்ச்சியான பரலோக வாழ்வை ஆண்டவர் இந்த பூமியிலேயே நாம் அனுபவிக்கும்படி நம்மை அவர் அழைத்திருக்கிறார். நம்மைச் சுற்றிலும் அனேக தேவைகள் இருந்தாலும் சரி, ஏராளமான எதிர்ப்புக்கள் இருந்தாலும் சரி, எண்ணில்லாத பிரச்சனைகள் இருந்தாலும் சரி, இந்த சூழ்நிலையில்தான் நாம் அந்த பரலோக வாழ்வை அனுபவித்து கர்த்தரை மகிமைப்படுத்த நம்மை தெரிந்தெடுத்திருக்கிறார். எப்படி தங்கம் வெட்டியெடுக்கப்பட்டு, அனேக சோதனைகளைக் கடந்து, பிறகு அணிகலன்களாக மின்னுகிறதோ, அதுபோல நாமும் பொன்னாக மின்னப்போகிறோம். எந்த காரியமும் நிலைப்பதில்லை. என் வாழ்வு முழுதும் தோல்விகள்தான், ஒரு ஜெயமில்லையே என்று சோர்ந்து போகாதிருங்கள். கர்த்தர் நம்மை உயர்த்தும் படி சினேகிக்கிறார்.
உம்முடைய தேவன் இஸ்ரவேலை என்றென்றைக்கும் நிலைநிறுத்தும்படிக்குச் சிநேகிக்கிறதினாலே, (2 நாளா 9:8) என்று வாசிக்கிறோம்.
நம்மை சீர்ப்படுத்தும் கர்த்தர்:  நாம் நிலை நிறுத்தப் படும்படிக்கு நம்மை முதலாவது சீர்ப்படுத்துகிறார். சீர்ப்படுத்தல் என்பது சமப்படுத்துதலைக் குறிக்கும். வேண்டாதவற்றை (பெருமை, மேட்டிமை, தேவையற்ற பழக்கங்கள் ஆகியன) வெட்டி எடுத்துப்போட்டு, குறைவுகளை (வியாதி, பெலவீனங்கள், தேவைகள் ஆகியன) தம் கிருபையைக் கொண்டு நிரப்பி நம்மைச் சீர்ப்படுத்துகிறார். சில சோதனைகளை சகித்துக் கொள்ளுங்கள்!
சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள் (ஏசா 61:3)
இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளையும் உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்துங்கள், அப்பொழுது உங்களை இந்த ஸ்தலத்திலே குடியிருக்கப்பண்ணுவேன். (எரே 7:3)
நம்மை ஸ்திரப்படுத்தும் கர்த்தர்: அடுத்ததாக நம்மை அவரது வார்த்தைகளில் ஸ்திரப்படுத்துகிறார். கன்மலையாகிய கிறிஸ்துவின்மேல் நம்மை நிறுத்தி ஸ்திரமாக்குகிறார். நமது வாழ்வில் காணப்ப்டுகிற அனைத்து சோதனைகளையும் தாண்டும்படி ஸ்திரப்படுத்திக் காக்கிறார். பயப்படாதிருங்கள்!
கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்.. (2 தெச 3:3)
கர்த்தாவே, சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்; அவர்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவீர். (சங்கீ 10:17)
நம்மை பலப்படுத்தும் கர்த்தர்: சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பின்பு பலப்படுத்துகிறார். மனிதரைப் போல அல்ல. நம்மோடு கூடவே இருந்து நம் கரத்தைப் பிடித்து பலப்படுத்துகிறார். கலங்காதிருங்கள்!
ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்.(1நாளா 29:12)
என் கை அவனோடே உறுதியாயிருக்கும்; என் புயம் அவனைப் பலப்படுத்தும். (சங்கீ 89:21)
கிறிஸ்துவுக்குள் தேவன் நம்மை அழைத்திருக்கிறார். நாம் ஆண்டவராகிய இயேசுவுக்குள் நிலைத்திருக்க நம்மை ஒப்புக்கொடுத்தால், குமாரன் மகிமைப்படும்படியாக, நம்மை நிலை நிறுத்தி ஆசீர்வதிப்பார். கர்த்தராகிய இயேசுவின் கிருபையால் நாம் உயர்த்தப்படுவோம்.
நீர் என் உத்தமத்திலே என்னைத்தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர். (சங்கீ 41:12)
ஆமென்!
ஜெபம் செய்வோமா?
எங்கள் அன்பு பிதாவே, நீர் கொடுத்த நல்ல வார்த்தைகளுக்காக உமக்கு ஸ்தோத்திரம். நாங்கள் சோதனைகளை சகிக்க உதவிசெய்யும். எங்களை நிலைநிறுத்தி ஆசீர்வதித்து உயர்த்தப்  போகிறபடியால், உமக்கு நன்றி! இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
உங்கள் கவனத்திற்கு!
நித்திய வாழ்வுக்கான வார்த்தைகளைத் தியானிப்பதோடு,
உங்கள்  நண்பர்களுக்கும் பகிர்ந்து, கர்த்தரின்
ஊழியத்தில் எங்களோடு இணையுங்கள்! ஜெப உதவிகளுக்குக்
கீழே உள்ள எண்களில் தொடர்புகொள்ளுங்கள்!
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதித்துக் காப்பாராக! ஆமென்! 

To Read old Articles, please visit:  wordforlifetamil.blogspot.com
bY GRACE ministries
(+91 99524 27477, +91 99945 99677, +91 99940 16570)